Friday, January 4, 2013

டாஸ்மாக் கடையை இழுத்து மூடிய தோழர்கள் மீது காவல்துறையினர் தடியடி!



இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டத்தை தமிழகமெங்கும்  இன்று (4.1.2013) தமிழக இளைஞர் முன்னணி நடத்தியது.  இப்போராட்டத்தின் போது சிதம்பரம், சுவாமிமலை(கும்பகோணம்), முருகன்குடி (பெண்ணாடம்) ஆகிய இடங்களில், காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமானத் தடியடியில் த.இ.மு. தோழர்களும் பொதுமக்களும் காயமடைந்தனர்.

சிதம்பரத்தில் காவல்துறையினர் தடியடி - பொய் வழக்கு
சிதம்பரத்தில் மேலவீதி, பெரியார் சிலை அருகிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தப்பெறுமென முன்கூட்டியே காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு பொது மக்களிடையேயும் விரிவாகப் பரப்புரை செய்யப்பட்டது.






போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக திரண்டுவந்த த.இ.மு. தோழர்களை நடுவழியிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திடீரென காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதில் போராட்ட தலைவர், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பளார் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.

இதற்கிடையில் டாஸ்மாக் கடையின் சட்டர் கதவை இழுத்து கடையை மூடினர். இப்போராட்டத்தில் பங்கேற்ற 4 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர். பிணையில் வரமுடியாத பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை இணைத்து, தோழர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு, பெண்களைத் தவிர்த்த ஏனையத் தோழர்கள் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முருகன்குடியில் காவல்துறையினர் தடியடி
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பகுதி முருகன்குடியில் டாஸ்மாக் மதுக்கடை இழுத்துப் பூட்டும் போராட்டம் பெருந்திரள் மக்கள் பங்கேற்போடு எழுச்சியாக நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மக்கள் ஆண்களும் பெண்களுமாய் கூடி தமிழக இளைஞர் முன்னணியின் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.





போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களும், ஆண்களும் திரளாகத் திரண்டு, டாஸ்மாக் மதுக்கடையின் சட்டரை இழுத்து மூடினர். அது கண்டு பொறுக்காத, காவல்துறையினர் பெண்களையும், ஆண்களையும் கைகளாலும், தடியாலும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். போராட்டத் தோழர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் தோழர்கள், டாஸ்மாக் கடையின் கதவை முழுவதுமாக இழுத்து மூடினர். தடியடியைக் கண்டித்து, சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். போராட்டத்தில் பங்கேற்ற கிராமப் பெண்கள் மதுவின் சீரிழிந்த விளைவுகளை கோபத்தோடு எடுத்துக்கூறி அரசையும் காவல்துறையினரையும் திட்டித் தீர்த்தனர். 21 பெண்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்திற்கு த.இ.மு. மூத்த தோழர் இரா.பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரகாசு முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், மற்றும் த.தே.பொ.க. தோழர் பெரியார் செல்வம், மகளிர் ஆயம் பொறுப்பாளர்கள் தோழர்கள் வித்யா, எழிலரசி, வளர்மதி உள்ளிட் 58 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை
சென்னை பல்லாவரம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். த.இ.மு. தாம்பரம், நகரக் கிளைப் பொறுப்பாளர்களும், தோழர்களும் என போராட்டத்தில் பங்கேற்ற 20 பேர் கைது செய்யப்பட்டனர்.




தஞ்சாவூர்
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக்  மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் காலை 11 மணியளவில் நடைபெற்றது.  தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ. செந்தில்குமரன் தலைமை தாங்கினார். த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் செந்திறல், த.இ.மு. நகரத் தலைவர் தோழர் இலெ.இராமசாமி, த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, த.தே.பொ.க. நகரத் துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், மகளிர் ஆயம் பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் தோழர் மீனா, தோழர்கள் உமா, கெளசல்யா, உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர்
ஓசூர் இராம் நகரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளைச் செயலாளர்கள் தோழர் இரமேசு, தோழர் சுப்பிரமணியம், மகளிர் ஆயத் தோழர் அபிராமி, தமிழக உழவர் முன்னணி இராயக்கோட்டை செயலாளர் தூர் வாசர் உள்ளிட்ட 17 பேர் கைதாயினர்.



கிள்ளுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் ஒன்றியம் கிள்ளுக்கோட்டை நகரிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப்பூட்டும் போராட்டம்  தமிழக இளைஞர் முன்னணி ஒன்றியத் தலைவர் தோழர் இலட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். த.இ.மு. பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் தேவதாசு, த.இ.மு. நிர்வாகிகள் மற்றும் 7 பெண்கள் உள்ளிட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.




சாமிமலை
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் சாமிமலையில், அரசு மேனிலைப்பள்ளி அருகிலுள்ள மதுக்கடையை இழுத்து பூட்டும் போராட்டம் தமிழக இளைஞர் முன்னணி கிளைச் செயலாளர் தோழர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர், த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர்கள் தோழர் செந்தமிழன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர் இளவரசி உள்ளிட்ட 10 பெண்களும், திரளானோரும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் ம.முரளி, தோழர் இளவரசி உள்ளிட்ட பெண்களும் கலந்து கொண்ட போராட்டத்தில், 21 பேர் கைதாயினர்.

கிருட்டிணகிரி
கிருட்டிணகிரி மாவட்டம், வரட்டணப்பள்ளியில் டாஸ்மாக் மதுக்கடை பூட்டும் போராட்டம் தமிழக ளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் பெ.ஈசுவரன் தலைமையில் நடைபெற்றது. காவல்துறையினருக்கும், போராட்டத் தோழர்களுக்கும் தள்ளுமுள்ள ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 20 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம் தவிர்த்து, ஏனைய இடங்களில் கைது செய்யப்பட்ட தோழர்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர். 

No comments:

Post a Comment