Saturday, January 5, 2013

சிதம்பரம் த.இ.மு தோழர்களை காவல்துறையினர் தாக்கியக் காட்சிகள்! - ஒளிப்பதிவு


மக்களை சீரழித்துக் கொண்டிருக்கும் மது விற்பனையைக் கண்டித்து, அரசின் மதுபானக் கடையான டாஸ்மாக் கடைகளை இளைஞர்களே திரண்டு நின்று இழுத்து மூட வேண்டும் என்பதற்கு அடையாளமாக, சனவரி 4 அன்று தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் “டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம்” நடத்தப்படும் என, கடந்த நவம்பர் மாதம் 17 அன்று குடந்தையில் நடைபெற்ற தமிழக இளைஞர் முன்னணியின் மாநாட்டில் அறிவித்திருந்தோம். 

அதன்படி, தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் மதுவின் சீரழிவுகளையும், டாஸ்மாக் கடைகள் மூட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பரப்புரை மேற்கொண்டனர். 

சனவரி 4 அன்று திட்டமிட்டவாறு, சிதம்பரம், ஓசூர், சென்னை, வரட்டணப்பள்ளி (கிருட்டிணகிரி மாவட்டம்), தஞ்சை, சாமிமலை (கும்பகோணம் வட்டம்), புதுக் கோட்டை, முருகன்குடி (பெண்ணாடம்) ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்றது. எழுச்சியுடன் போராட்டங்களை நடத்தியத் தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 

சென்னை பல்லாவரத்தில், பேருந்து நிலையத்திற்குள் அடுத்தடுத்து உள்ள 2 மதுபானக் கடைகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட, நான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டோம். 

நாங்கள் கைதாகி மண்டபத்தில் இருந்த போது தான், அத்தகவல் வந்து சேர்ந்தது. 

சிதம்பரம், முருகன்குடி ஆகிய இடங்களில் காவல்துறையினர் மிகக்கடுமையான முறையில் தோழர்களைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர் என்பதே அத்தகவல். 

மது என்ற அரக்கனை சமூகத்திலிருந்து அடியோடு அகற்ற வேண்டுமென, தன்னலமின்றி போராட முன்வந்த த.இ.மு. தோழர்களுக்கு, 'சமூகத்தின் பாதுகாவலன்' எனக் கூறிக் கொள்ளும் காவல்துறையினர் பாதுகாப்பு அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? ஆனால், காவல்துறையினர் அதைச் செய்யவில்லை. 

குடிகாரனுக்கு எப்படி கடை மூடுவது பிடிக்காதோ, அதைவிட வேகமான வெறியுடன் கடையை தோழர்கள் மூடிவிடக் கூடாதென்ற பதைபதைப்புடன் நின்றிருந்த காவல்துறையினர், தமிழக இளைஞர் முன்னணியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோரை தாக்கினர். அதைத் தான் இந்தக் காணொளியில் நாம் கண்டோம். 

பெண்ணாடம் வட்டம் முருகன்குடியில், டாஸ்மாக் மதுக்கடைக்குப் பூட்டு போட, திரளாக திரண்டு வந்திருந்த தமிழக இளைஞர் முன்னணி, மகளிர் ஆயம் தோழர்களையும், பொது மக்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கியதை மக்கள் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியிருக்கிறது. 

அதுவும் உங்கள் பார்வைக்கு:
http://www.istream.com/news/watch/253786/Primetime-News--Jan-4-2013

மதுவிலக்கு என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகப் போராடும் இளைஞர்களை காவல்துறையினர், இப்படி வெறி கொண்டுத் தாக்குவது, மதுவின் மீது காவல்துறையினருக்கு உள்ள மோகத்தையும், மதுக்கடைகளால் காவல்துறையினருக்குக் கிடைக்கும் கமிசன் வருமானம் பறிபோகுமே என்ற பதைபதைப்பையும் தான் காட்டுகிறது. இக்காவலர்களை இனியும், “சமூகத்தின் காவலர்” என நாம் கருதலாமா? கூடாது. 

தோழர்களை தாக்கிய காவல்துறையினர் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருவோம்! மக்கள் போராளிகள் மீதான அடக்குமுறைகள், ஒருபோதும் நம்மை முடக்காது..! மேலும், மேலும் வீரியமாக நாம் மேலெழுவதற்கே அது உதவும்..!

மேலேழுவோம்! 
அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைக்கு 
எதிராக மேலேழுவோம்! 

தோழமையுடன்,
க.அருணபாரதி
பொதுச் செயலாளர்,
தமிழக இளைஞர் முன்னணி. 

No comments:

Post a Comment