தமிழக இளைஞர் முன்னணி சார்பில்,
சனவரி 4 – அன்று தமிழகமெங்கும்
டாஸ்மாக் மதுக்கடைகள் இழுத்துப் பூட்டும் போராட்டம்!
இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம், வரும் சனவரி 4 2013 அன்று தமிழகமெங்கும் நடத்தப்படும் என, கடந்த 17.11.2012 அன்று குடந்தையில் நடைபெற்ற தமிழக இளைஞர் முன்னணியின் ஆறாவது தமிழக மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பரப்புரைகள் தமிழகமெங்கும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இளைஞர்களை போதையில் ஆழ்த்தி, அவர்தம் ஆளுமையைச் சீரழித்து, உடலையும் நாசப்படுத்தும் மதுவை, அரசே விற்பனை செய்து வருகிறது. உணவைப் போலவே, மக்களுக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ள கல்வி, மருத்துவம் ஆகியவற்றை தனியார் நிறுவன முதலாளிகள் கொள்ளை இலாபத்தில் விற்றுக் கொண்டிருக்க, அரசாங்கமோ மது விற்பனையில் இலக்குகள் நிர்ணயித்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசு தமிழகத்திலிருந்து கொள்ளையடித்துச் செல்லும் பணத்தை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழக அரசு, மதுக்கடைகளை மூட முன்வரவில்லையெனில், அப்பணியை விழிப்புணர்வுள்ள தமிழக இளையோரைத் திரட்டி நாம் மேற்கொள்வோம்.
அதன்படி, வரும் சனவரி 4 அன்று கீழக்கண்ட இடங்களில், டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடைபெறும்.
· ஓசூர் தாலுக்கா அலுவலகம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்கிறார்.
· சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் காலை 10 மணியளவில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி தலைமையேற்கிறார்.
· தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமார் தலைமையேற்கிறார்.
· சிதம்பரம் மேலவீதி கஞ்சித்தொட்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையேற்கிறார்.
· பெண்ணாடம் முருகன்குடி முதன்மைச் சாலையில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரகாசு தலைமையேற்கிறார்.
· சுவாமிமலை ஆத்தங்கரைத் தெரு அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் செந்தமிழன் தலைமையேற்கிறார்.
· புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. அமைப்பாளர் தோழர் மணிகண்டன் தலைமையேற்கிறார்.
· கிருட்டிணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி கடைவீதியில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் பெ.ஈசுவரன் தலைமையேற்கிறார்.
· திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கடை வீதியில், த.இ.மு. சார்பில், மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முன்னணித் தோழர் பாவலர் மு.வ.பரணர் தலைமையிலும், தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் தியாகராஜன் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இப்போராட்டங்களில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக சக்திகளும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென தமிழக இளைஞர் முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது.
தோழமையுடன்,
கோ.மாரிமுத்து (தலைவர், தமிழக இளைஞர் முன்னணி),
க.அருணபாரதி (பொதுச் செயலாளர், தமிழக இளைஞர் முன்னணி)
No comments:
Post a Comment